மாவட்ட செய்திகள்

புளியந்தோப்பில் எப்போதும் மூடிய நிலையில் இருக்கும் கழிவறை கட்டிடம்

புளியந்தோப்பில் எப்போதும் மூடிய நிலையிலே இருக்கும் கழிவறை கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் ஆட்டுதொட்டி அருகே சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் கழிவறை கட்டிடம் உள்ளது. இந்த கழிவறை ஏதாவது ஒரு நாள் திறந்து இருப்பதை பார்த்தால் அது அதிசயம்தான். ஏனென்றால் இந்த கழிவறை 24 மணி நேரமும் மூடிய நிலையிலே உள்ளது.

போதிய தண்ணீர் வசதி இல்லாததால் இந்த கழிவறை மூடியபடியே உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து வார்டு உதவி பொறியாளர் உள்பட சம்பந்தபட்ட மாநகராட்சி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து கழிவுநீர் வாரியத்தில் புகார் தெரிவிக்கும்படி மக்களை அலைக்கழித்து வருகின்றனர்.

அப்படியே கழிவுநீர் வாரியத்திலும் புகார் கொடுத்தாலும் இதுபற்றி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எப்போதும் மூடியே கிடக்கும் கழிவறை கட்டிடத்தின் முன்பு சிலர் மாடுகளை கட்டி வைத்துள்ளனர். மேலும் அங்கு கழிவுநீர் தேங்கி உள்ளதால், மாடுகளின் கழிவும் அதில் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.

செங்குன்றம், மாதவரம், மணலி, மூலக்கடை, வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக பாரிமுனை, சென்டிரல், எழும்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்களும், அந்த வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பொதுமக்களும் இந்த கழிவறை பகுதியை கடந்து செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்த கழிவறை முன் மாடுகள் கட்டப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. யாருக்கும் எந்த உபயோகமும் இல்லாமல், சுகாதார சீர்கேடுகளை உருவாக்கி வரும் இந்த கழிவறை கட்டிடத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு