சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேலும் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.
513 பேருக்கு பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று மேலும் 513 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 270 பேர், ஓமலூரில் 48 பேர், வீரபாண்டியில் 24 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 19 பேர், மேச்சேரி மற்றும் நங்வள்ளியில் தலா 18 பேர், பனமரத்துப்பட்டியில் 17 பேர், வாழப்பாடி மற்றும் அயோத்தியாபட்டணத்தில் தலா 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
40,885 ஆக அதிகரிப்பு
இதேபோல், சங்ககிரி, ஆத்தூர் நகராட்சி மற்றும் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் தலா 10 பேர், தாரமங்கலத்தில் 8 பேர், காடையாம்பட்டி, கெங்கவல்லியில் தலா 7 பேர், மகுடஞ்சாவடி, எடப்பாடியில் தலா 5 பேர், நரசிங்கபுரம் நகராட்சியில் 4 பேர், தலைவாசல், ஏற்காடு, கொங்கணாபுரம் பகுதியில் தலா 3 பேர், பெத்தநாயக்கன்பாளையத்தில் 2 பேர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 530 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
5 பேர் பலி
சேலம் மாவட்டத்தை சேர்ந்த 64 வயது ஆண், 35 வயது ஆண், 56 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இவர்கள் உயிரிழந்தனர். இதேபோல், 60 வயது ஆண் மற்றும் 65 வயது ஆண் ஆகியோரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் நேற்று இவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.