மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு

காஞ்சீபுரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சீபுரம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த புரிசையை சேர்ந்தவர் மணி (வயது 52). கூலித்தொழிலாளி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் நேதாஜி என்கிற சுபாஷ் சந்திரபோஷ் (33), இவரது தந்தை பொன்னுசாமி (65). அதே பகுதியை சேர்ந்தவர்கள் சுமதி (43), சொர்ணா என்கிற சொர்ணாதேவி (31).

இந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஷ், பொன்னுசாமி, சுமதி, சொர்ணாதேவி ஆகியோருக்கும், மணிக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததது.

இந்த நிலையில், கடந்த 25.12.2015 அன்று மணி குடும்பத்தினருக்கும், சுபாஷ் சந்திரபோஷ், பொன்னுசாமி, சுமதி, சொர்ணாதேவி தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட தகராறில் சுமதி, சொர்ணாதேவி ஆகியோர் மணியை தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் பொன்னுசாமி, நேதாஜி ஆகியோர் மணியை உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தடுக்க வந்த மணியின் மகன் கோவேந்தனை யும் கட்டையால் தாக்கினர்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையொட்டி சுபாஷ் சந்திரபோஷ், பொன்னுசாமி, மற்றும் சிலரை போலீசார் கைது செய்தனர். இதில் பொன்னுசாமி இறந்துவிட்டார். இந்த கொலை வழக்கு காஞ்சீபுரத்தில் உள்ள மாவட்ட செசன்ஸ் கோர்ட்டு 2-ல் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அய்யம்பேட்டை கே.சம்பத் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கருணாநிதி, மணியை கொலை செய்த சுபாஷ்சந்திரபோசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில், சுமதி, சொர்ணாதேவி விடுதலை செய்யப்பட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு