மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் பாயில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவலம்

கரூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் பாயில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை காணப்படுகிறது. கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கரூர்,

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மாவட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான நோயாளிகள் வருகை தருவது உண்டு. காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற சராசரியாக ஆயிரம் பேர் வருவது உண்டு. இதில் சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கரூரில் காய்ச்சல் பரவலாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மாவட்டத்தில் இறந்தவர்கள் விவரம் பற்றி இதுவரை அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும் டெங்கு காய்ச்சலுக்கு நேற்று முன்தினம் மணவாசியில் சிறுமி ஒருவர் இறந்தார். ராயனூரிலும் காய்ச்சலுக்கு மாணவி ஒருவர் இறந்தார். இதனால் பொதுமக்களிடத்தில் டெங்கு காய்ச்சல் பீதியை ஏற்படுத்தி வருகிறது.

கரூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற ஏராளமானோர் வருகின்றனர். இதில் சிலர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இவ்வாறு சிகிச்சை பெறுபவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகள் வார்டில் 13 வயதிற்குட்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 28 படுக்கைகள் மட்டுமே உள்ளன. தற்போது காய்ச்சலுக்கு சிகிச்சை பெற குழந்தைகள் அதிக அளவில் வருவதால் படுக்கை வசதி போதுமானதாக இல்லை. இதனால் வார்டில் வளாகப்பகுதியில் தரையில் பாயை விரித்து அதில் அவர்களை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. குழந்தைகளின் பெற்றோர், உறவினர்கள் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். இட நெருக்கடியுடன் குழந்தைகள் வார்டு உள்ளது.

காய்ச்சல் காரணமாக பெரியவர்களை விட குழந்தைகள் தான் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அதிகமாக அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் குழந்தைகள் வார்டில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்படுமா? என அங்கு சிகிச்சைக்காக வந்துள்ள குழந்தைகளின் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். மேலும் மருத்துவமனை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் இடவசதி ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தரையில் பாயில் அருகருகே குழந்தைகளை படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதால் நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே உரிய கவனம் செலுத்தி மருத்துவமனையில் குழந்தைகள் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் பொருட்டு மேலும் ஒரு வார்டு வசதியை தற்காலிகமாக ஏற்படுத்தி கொடுத்தால் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...