பெரும்பாவூர்,
திருச்சூர் அருகே உள்ள பாலரெட்டியை சேர்ந்தவர்கள் முகமது அபுபக்கர் (வயது 20), முகமது ஷாசிக் (24), ஷிபின் (24). இவர்கள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்று வளையலை அடமானமாக வைத்து ரூ.80 ஆயிரம் பணம் கேட்டனர். அந்த வளையலை சோதனை செய்த போது அது போலி நகை என்று தெரிந்தது.
இதுகுறித்து வடக்கன்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்களில் போலி நகைகளை அடகு வைத்து பல லட்ச ரூபாய் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.