வேலூர்,
வேலூர் தொரப்பாடி எழில்நகரை சேர்ந்தவர் பாபு, அரசு கட்டிட ஒப்பந்ததாரர். இவருடைய மனைவி உஷாராணி (வயது 48). கணவன்-மனைவி இருவரும் நேற்று காலை மோட்டார்சைக்கிளில் வேலூர் நோக்கி வந்தனர். ஊரீசு கல்லூரி அருகே காலை 10 மணியளவில் வந்தபோது எதிரே ஆந்திராவில் இருந்து அய்யப்ப பக்தர்கள் சென்ற தனியார் பஸ், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதில், நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து உஷாராணி தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க சக்கரம் அவர் தலை மீது ஏறி இறங்கியது. இதனால் உஷாராணி தலை நசுங்கி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தனது கண்முன்பே மனைவி தவறி விழுந்து உயிரிழந்ததை கண்டு பாபு கதறி அழுது துடித்தார். இதைக்கண்ட வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று உஷாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.