விருத்தாசலம்,
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இன்று(புதன்கிழமை) காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோரும், உறவினர்களும் தீவிரமாக செய்து வந்தனர்.
இது பற்றி அறிந்ததும் சைல்டு லைன் ஆலோசகர் பார்த்தீபராஜ் தலைமையில் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயப்பிரபா, ஊர் நல அலுவலர்கள் விஜயா, பானுமதி மற்றும் விருத்தாசலம் போலீசார் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், 16 வயது சிறுமிக்கு திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் 18 வயது பூர்த்தி அடைந்த பின்னர்தான் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும் என்று சிறுமியின் பெற்றோரிடம் கூறினர். மேலும் மீறி சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த சிறுமியை அதிகாரிகள் மீட்டு கடலூர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.