மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

ஈரோடு

10-ம் வகுப்பு மாணவியை ஏமாற்றி தாலி கட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

டிரைவர்

கவுந்தப்பாடி அருகே உள்ள பெருந்தலையூர் பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் என்பவருடைய மகன் சங்கரநாராயணன். 19 வயதான இந்த வாலிபர் டிரைவர் வேலை மற்றும் கூலி வேலைக்கு சென்று வந்தார். தாய்-தந்தை இல்லாததால், பாட்டியுடன் பெருந்தலையூர் பகுதியில் வசித்து வந்தார்.

இவர் டிரைவர் வேலைக்காக அடிக்கடி அறச்சலூர் பகுதிக்கு சென்று வந்தார். அப்போது 10-ம் வகுப்பு படித்து வந்த சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கத்தை வைத்து, சங்கரநாராயணன், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி ஏமாற்றினார்.

பாலியல் பலாத்காரம்

கடந்த 10-9-2020 அன்று சிறுமியை பெருந்தலையூருக்கு சங்கரநாராயணன் கடத்திச்சென்றார். அங்கு பாட்டி வீட்டில் தங்க வைத்த அவர், 11-9-2020 அன்று அங்குள்ள விநாயகர் கோவிலில் வைத்து கட்டாய தாலி கட்டியதுடன், சிறுமியின் விருப்பம் இன்றி பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதற்கிடையே சிறுமி காணாமல்போனது தொடர்பான புகாரின் பேரில் அறச்சலூர் போலீசார் சிறுமியை மீட்டனர். மேலும், அவரை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று தாலி கட்டி கட்டாய பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சங்கரநாராணனை போலீசார் கைது செய்தனர். அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

20 ஆண்டு ஜெயில்

மேலும் இது தொடர்பாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வாலிபர் சங்கரநாராயணனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனை அனுபவிக்கவும் அந்த தீர்ப்பில் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் எம்.ஜெயந்தி ஆஜர் ஆனார்.