களியக்காவிளை,
களியக்காவிளை அருகே விளவங்கோடு பகுதியை சேர்ந்தவர் தாணப்பன். இவருடைய மகன் சன்ஜூ(வயது 29). இவர் குழித்துறை நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.
சன்ஜூவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. இதனால் வீட்டு வேலைகளை சன்ஜூவே செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அடுப்பில் சன்ஜூ வெந்நீர் வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது தீ பட்டு உடல் முழுவதும் கருகியது.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.