மாவட்ட செய்திகள்

புதையல் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற கேரள வாலிபர் கைது

புதையல் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு,

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள உத்திரகந்தமலை பகுதியை சேர்ந்தவர் டேவிட் லாரன்ஸ் (வயது 33). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள நிலம்பூர் பகுதியை சேர்ந்த அனஸ் கொடிஞ்சத் (27) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.

ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். அனஸ் கொடிஞ்சத், தனக்கு தெரிந்த நண்பரிடம் 10 கிலோ தங்க புதையல் இருப்பதாகவும், அதன் மதிப்பு ரூ.10 லட்சம் என்றும் டேவிட் லாரன்சிடம் கூறி உள்ளார்.

மேலும் அவர், அதனை வாங்க தன்னிடம் ரூ.7 லட்சம் இருப்பதாகவும், மீதி ரூ.3 லட்சம் கொடுத்தால் தங்க புதையலை வாங்கி அதை பாதி பாதியாக பிரித்து கொள்ளலாம் என்றும் டேவிட் லாரன்சிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை நம்பிய டேவிட் லாரன்ஸ் முன்பணமாக ரூ.5 ஆயிரத்தை டேவிட் லாரன்சிடம் கொடுத்தார். மீதி பணத்தை தங்க புதையலை காட்டியதும் கொடுப்பதாகவும் அவர் கூறி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனஸ் கொடிஞ்சத் தங்க புதையலை வாங்குவதற்காக பணத்தை எடுத்துக்கொண்டு ஈரோடு பஸ் நிலையத்துக்கு வருமாறு டேவிட் லாரன்சை அழைத்துள்ளார். அதன் பேரில் டேவிட் லாரன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நேற்று ஈரோடு பஸ் நிலையத்துக்கு எதிரே உள்ள ஒரு பேக்கரிக்கு வந்தனர்.

அப்போது டேவிட் லாரன்ஸ் தங்க புதையல் குறித்து அனஸ் கொடிஞ்சத்திடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த டேவிட் லாரன்ஸ் மற்றும் அவரது நண்பர்கள் அனஸ் கொடிஞ்சத்தினை பிடித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அனஸ் கொடிஞ்சத்திடம் விசாரணை நடத்தியபோது, பழங்காலத்து மன்னர் உருவம் பொறித்த தங்க காசுகள் இருப்பது போன்ற வாட்ஸ்அப் படத்தை டேவிட் லாரன்சிடம் காண்பித்து இதுதான் தங்க புதையல் என்றுகூறி பணத்தை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனஸ் கொடிஞ்சத்தை கைது செய்தனர்.