மாவட்ட செய்திகள்

பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலி

திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலியானார்.

திருச்சி, ஜன.5-
திருச்சி ஜங்ஷனில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் தலை நசுங்கி பலியானார்.
வாலிபர் பலி
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி மார்க்கெட் வழியாக தீரன் நகருக்கு செல்லும் அரசு டவுன் பஸ் ஒன்று மத்திய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் பிற்பகல் 1.15 மணியளவில் ஜங்ஷன் ரெயில்வே ரவுண்டானா அருகே மெதுவாக சென்றது. அந்த வேளையில் ரெயில் நிலையத்தில் இருந்து வேகமாக வந்த 30 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், பஸ்சின் பக்கவாட்டில் மோதி, பஸ்சின் அடியில் விழுந்தார்.
அப்போது பஸ்சின் பின்பக்க டயர், அந்த நபரின் தலையில் ஏறி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவப்பு நிற டி-சர்ட் மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊரைச்சேர்ந்தவர்? என தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT