மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் வீட்டில் நகை திருட்டு

நாமகிரிப்பேட்டை அருகே லாரி டிரைவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச்சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமகிரிப்பேட்டை,

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 50), லாரி டிரைவர். இவர் கடந்த 21-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்தனர். அப்போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அவர் நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. திருட்டு போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT