விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் அரிராம் மகன் ஆனந்த் (வயது 29), தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி நவநீதம் (24). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2008-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
மது குடிக்கும் பழக்கமுடைய ஆனந்த், 25.2.2014 அன்று நடத்தையில் சந்தேகப்பட்டு நவநீதத்தை கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை செய்தார்.
கணவருக்கு ஆயுள் தண்டனை
இது தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ஆனந்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஆனந்த், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராதிகா செந்தில் ஆஜரானார்.