ஈரோடு,
கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் அ.தி.மு.க. சார்பில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்தனர். அதன்படி ஈரோடு மாநகராட்சியில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும் 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் அம்மா உணவகங்களுக்கு வந்து உணவு வாங்கிச்சென்று வருகிறார்கள்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பதால் வருகிற 17-ந் தேதி வரை இலவச உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக அம்மா உணவகங்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி சூரம்பட்டி அம்மா உணவகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு அரிசி வழங்கினார்.
ஈரோட்டில் உள்ள 11 அம்மா உணவகங்களுக்கும் 3 ஆயிரத்து 500 கிலோ அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.சக்தி கணேசன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன், சிந்தாமாணி தலைவர் ஜெகதீசன், அ.தி.மு.க. பாசறை மாவட்ட செயலாளர் பி.பி.கே.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அம்மா உணவகத்தில் சமைத்து பொதுமக்களுக்கு வழங்க தயாராக இருந்த உணவை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.