ஓமலூர்,
சென்னையில் இருந்து நேற்று சேலத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தொடர்ந்து கர்நாடக அரசு முரண்டு பிடித்துக்கொண்டிருக்கிறது, ஆணையத்திற்கான உறுப்பினரை நியமிக்கவில்லையே?.
பதில்:- ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டால் தெளிவாக தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையிலே, மத்திய அரசால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் அமைக்கப்பட்டு அதற்குத் தேவையான உறுப்பினர்களை 4 மாநிலமும் வழங்க வேண்டும் என்று தகவல் கொடுக்கப்பட்டு, அதனடிப்படையிலே, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகள் தங்களுடைய பிரதிநிதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. ஆனால், கர்நாடக மாநில அரசு மட்டும் அவர்களுடைய பிரதிநிதிகளை பரிந்துரைக்காத காரணத்தினால், மத்திய அரசு, தானாக கர்நாடகத்திற்கான பிரதிநிதிகளை நியமித்திருக்கிறது.
கேள்வி:- தொடர்ந்து நமக்கு கிடைக்கக்கூடிய தண்ணீர், இந்த மாதம் வருவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா?.
பதில்:- ஒவ்வொரு மாதமும், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு 10 நாட்களுக்கு ஒரு முறை அதைக் கணக்கிட்டு, நமக்கு வழங்க வேண்டிய நீரை வழங்குவதற்கு உண்டான நடவடிக்கையை மேற்கொள்ளும். அதை ஆணையம் மேற்பார்வையிட்டு நடைமுறைப்படுத்தும்.
கேள்வி:- பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலைமாறி, இன்றைக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறதே?.
பதில்:- சுமார் 56 கிலோ மீட்டருக்கு தர்மபுரியில் எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது. சேலத்தை பொறுத்தவரை 30 கிலோ மீட்டருக்கு எல்லைக் கல் நடப்பட்டுவிட்டது, இன்னும் 6 கிலோ மீட்டர் மட்டும் நடப்படவேண்டியிருக்கிறது. இதில், 100-க்கு 4 அல்லது 5 விவசாயிகள் தங்களுடைய நிலத்தைக் கொடுக்க மறுக்கின்றார்கள். பெரும்பாலான விவசாயிகள் தங்களுடைய நிலங்களை பசுமை வழிச்சாலை அமைப்பதற்கு தாமாக முன்வந்து வழங்கி இருக்கின்றார்கள்.
இந்த பசுமை வழிச்சாலை மிக முக்கியமான சாலை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். 2006-ம் ஆண்டு என்று கருதுகின்றேன், கிருஷ்ணகிரியில் இருக்கின்ற தேசிய நெடுஞ்சாலை, பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக மதுரை, திருச்சி செல்கின்ற சாலை, அதேபோல, உளுந்தூர்பேட்டை சாலை இரண்டும் கிட்டத்தட்ட 2006-ல் அமைக்கப்பட்டது.
2009-ல் இருந்து 2011 வரை உளுந்தூர்பேட்டை சாலை அமைக்கப்பட்டது. தமிழகத்தில் அப்பொழுது வாகனங்களுடைய எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சம். தற்போது வாகனங்களுடைய எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சம், எந்தளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை சிந்திக்க வேண்டும். அதற்கேற்றவாறு சாலைகளை உருவாக்குவது அரசினுடைய கடமையாகும். அதற்கு மத்திய அரசாங்கம் இப்பொழுது முன்வந்து, இந்த பசுமை வழிச்சாலையை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது, அதற்கு மாநில அரசும் உதவி செய்கிறது.
கேள்வி:- இழப்பீட்டைப் பொறுத்தவரை இன்னும் கொஞ்சம்.....
பதில்:- அதாவது, ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் வாயிலாக, தங்கள் பகுதியில் எவ்வளவு இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம்கூட பத்திரிகையிலும், ஊடகத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது.
கேள்வி:- அரசியல் கட்சிகள் மறியல் செய்தால், அன்றைக்கு மாலையே விடப்படும் சூழ்நிலைமாறி அவர்கள் மீது வழக்கு பதியக்கூடிய சூழ்நிலை.....
பதில்:- இதுவரைக்கும் யாரும் வழக்கு பதிவு செய்யவில்லை. இன்றைக்கும் பெரும்பாலான இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடைபெற்றது, யாரும் கைது செய்யப்படவில்லை. சட்டத்திற்கு புறம்பாக அவர்கள் நடந்து கொள்கின்றபொழுதுதான் கைது செய்யவேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றது. இன்றைக்கு நாமக்கல்லைப் பற்றி குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றீர்கள். கவர்னர் அங்கே வருகின்றபொழுது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவர்கள் கருப்புக்கொடி காட்டுவதைத் தவிர்த்து, வேறு இடத்திலே, சட்டம்-ஒழுங்கை சீர்படுத்துகின்ற விதத்திலே காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்க முடியாத சூழ்நிலை அவர்களை கைது செய்ய வேண்டி வந்தது.
கேள்வி:- விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பது பற்றி.....
பதில்:- ஏற்கனவே நிலம் எடுக்கப்பட்டிருக்கிறது, இப்பொழுது நாங்கள்வந்து எடுக்கவில்லை. ஏற்கனவே, முந்தைய காலத்திலே இருந்து நிலம் எடுக்கப்படுகின்ற சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு வளர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை. சேலத்தில் பார்த்தீர்களானால், ராணுவ வழித்தடம் வரவிருக்கிறது, இன்னும் தொழிற்சாலை அதிகமாக வரவேண்டும். படித்த, பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். பொருளாதார வளர்ச்சி அடையவேண்டும் என்று சொன்னால், அந்த பகுதியிலே தொழில் வளர்ச்சி சிறக்க வேண்டும், அந்தத் தொழிற்சாலைகள் நம்முடைய பகுதியில் வருவதற்கு இன்றைக்கு மிகுந்த வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இந்த விமான நிலைய விரிவாக்கம் தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது.
கேள்வி:- இது தொடர்பாக ஒரு கருத்துகூட கேட்டவில்லை என்ற ஒரு கேள்வி இருக்கிறதே.....
பதில்:- இதுவரை 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் கூடியிருக்கிறது, 1200 பேருக்கு மேல், இந்தக் கூட்டங்களில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய சேலம் மாவட்டத்தில் 20 முறை கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது, ஆங்காங்கே தாலுகா அளவில் நடத்தியிருக்கிறார்கள்.
கேள்வி:- நில மதிப்பீடு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறதா?