மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; தந்தை, மகன் பலி

திருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியானார்கள்.

லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி பஞ்சாயத்து ஆற்றம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45). இவரது மனைவி சுமதி (40). இவர்களது மகன் பரத் குமார் (17). இவர்கள் 3 பேரும் நேற்று திருத்தணியில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

வழியில் பட்டாபிராம்புரம் தனியார் மாவு மில் அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் இருந்து வேகமாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் சீனிவாசன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தாய் சுமதி, மகன் பரத் குமார் ஆகியோரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரத்குமார் பரிதாபமாக இறந்தார்.

சுமதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT