திருவாரூர்,
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தொடர் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. நான்காம் கட்டமாக இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக அறவழி போராட்டம் நடத்தி கோரிக்கை மனு அளிக்க பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
கோரிக்கை மனு
அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பா.ம.க.வினர் ஊர்வலமாக புறபட்டு திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தனர். அங்கு நடைபெற்ற அறவழி போராட்டத்திற்கு பா.ம.க. மாவட்ட துணைச்செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வேணு பாஸ்கரன், வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணை தலைவர் சிவா, மாநில இளைஞரணி துணை செயலாளர் நரசிம்மன், மாவட்ட மகளிரணி தலைவி லலிதா, நகர தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.