தஞ்சாவூர்,
சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு மற்றும் சேவைவரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்யவேண்டும். இல்லாவிட்டால் தியேட்டர்களை 3-ந்தேதி முதல் மூடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்றுமுதல் கும்பகோணத்தில் 6 தியேட்டர்களும், பட்டுக்கோட்டையில் 5 தியேட்டர்களும், தஞ்சையில் 9 தியேட்டர்களும், பாபநாசத்தில் 1 தியேட்டரும் என தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 21 தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.