மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் வாலிபர் கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்

கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே கிராமத்தில் உள்ள பாலம் அருகே உடலில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராஜ் மகன் கார்த்திக் (வயது 28), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் அதே கிராமத்தில் உள்ள பாலம் அருகே உடலில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்த, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவில்பட்டி மேற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

டி.எஸ்.பி. ஜெகநாதன், கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கார்த்திக்கை செங்கலால் தாக்கி மர்ம நபர்கள் கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.