தஞ்சாவூர்:-
அரியானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தேர்வு சென்னையில் நடக்கிறது.
விளையாட்டு போட்டிகள்
தஞ்சை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-22-ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் அரியானா மாநிலத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கபடி, கைப்பந்து, கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டு போட்டிகள் இடம் பெறுகிறது.
தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் சென்னையில் நடக்கிறது. இதையொட்டி வருகிற 24-ந் தேதி கபடி விளையாட்டுக்கான தேர்வுப்போட்டி (பெண்களுக்கு மட்டும்) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
ஆக்கி
இதேபோல் பெண்களுக்கு மட்டும் வருகிற 20-ந் தேதி ஆக்கி விளையாட்டுக்கான தேர்வுப்போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஆக்கி விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. பெண்களுக்கு மட்டும் 24-ந் தேதி கால்பந்து விளையாட்டுக்கான தேர்வுப்போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளது. தொடர்ந்து கைப்பந்து தேர்வு போட்டிகள் ஆண்களுக்கு வருகிற 25-ந் தேதியும், பெண்களுக்கு 26-ந் தேதியும் நடக்கிறது.
விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 1.1.2003-ம் ஆண்டிற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆதார் அட்டை நகல் அல்லது பாஸ்போர்ட் நகல், 5 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பிறப்பு சான்றிதழ் நகல், கல்வி பயில்வதற்கான பள்ளி, கல்லூரி சான்றுகளுடன் மேற்காணும் விவரப்படி காலை 6 மணிக்கு அந்தந்த விளையாட்டு தேர்வு போட்டி நடைபெறும் இடத்தில் ஆஜராக வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.