ஆவடி,
சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு நவசக்தி நகரில் வசித்து வருபவர் பச்சையப்பன்(வயது 32). இவர், திருமுல்லைவாயலை அடுத்த காட்டூர் கோவிலில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவருடைய மனைவி மஞ்சு(25). இவர்களுக்கு துரையரசன் (5), தினேஷ் (3) என 2 மகன்கள். இவர்களில் துரையரசன், அருகில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறான்.
பச்சையப்பன் அதே பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வருகிறார். இதற்காக அதன் அருகிலேயே குடிசை அமைத்து தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை பச்சையப்பன் வேலைக்கு சென்றுவிட்டார். மாலை 3 மணியளவில் மகன் துரையரசனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக குழந்தை தினேசை வீட்டில் தூங்க வைத்துவிட்டு, கதவை வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு மஞ்சு பள்ளிக்கு சென்றுவிட்டார்.
அப்போது குடிசையின் அருகில் சென்ற மின்வயர் உரசியதில் குடிசை தீப்பிடித்து எரிந்தது. இதில் குடிசையில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியதால் குடிசை முழுவதும் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. வெப்பம் தாளாமல் எழுந்த குழந்தை தினேசால், வெளியே வரமுடியாமல் கதறி அழுதது.
ஆனால் குடிசைக்கு அருகில் வீடுகள் எதுவும் இல்லாததால் யாரும் உதவிக்கு வரமுடியவில்லை. சிறிதுநேரம் கழித்து குடிசை தீப்பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் சிலர், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.
அதற்குள் ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் குடிசை தீயில் முற்றிலும் எரிந்து தரைமட்டமானது. குடிசையில் இருந்த பீரோ, கட்டில், பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையாகின.
இதற்கிடையில் பள்ளியில் இருந்து மகனை அழைத்துக்கொண்டு வந்த மஞ்சு, தனது குடிசை தீப்பிடித்து எரிந்து கிடப்பதையும், அங்கு தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் திரண்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது தனது குழந்தை, குடிசைக்குள் தூங்கிக்கொண்டிருந்ததாக கூறி கதறி அழுதார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள், குடிசைக்குள் தீயில் எரிந்து கிடந்த பொருட்களை அகற்றிவிட்டு பார்த்தபோது, குழந்தை தினேஷ், உடல் கருகி கரிக்கட்டையாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
குடிசை வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டி இருந்ததால் குழந்தையால் வெளியே வரமுடியாமல் குடிசைக்குள் சிக்கி தீயில் கருகி இறந்துவிட்டது தெரிந்தது. குழந்தையின் உடலை பார்த்து மஞ்சு மற்றும் அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், பலியான குழந்தை தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடிசை தீப்பிடித்து எரிந்ததில் 3 வயது குழந்தை உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.