மாவட்ட செய்திகள்

ஆவடி அருகே ரூ.1 கோடி அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ஆவடி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள அரசு ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.

ஆவடி,

ஆவடியை அடுத்த கோவில்பதாகை கிராமத்தில் உள்ள பெரிய ஏரி நீர்நிலை புறம்போக்கு வகைபாடு கொண்ட அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டி இருப்பதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று காலை ஆவடி தாசில்தார் சரவணன் தலைமையில் மண்டல துணை தாசில்தார் செந்தில்குமார், திருமுல்லைவாயல் வருவாய் ஆய்வாளர் செல்வராசு, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட வருவாய்த்துறை ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர் அங்கு ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்கள், சுற்றுச்சுவர்களை பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.

இதையொட்டி அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க ஆவடி டேங்க்பேக்டரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

SCROLL FOR NEXT