மாவட்ட செய்திகள்

கொடுங்கையூர் அருகே மதுக்கடை முன் 2-வது முறையாக பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

கொடுங்கையூரை அடுத்த மூலக்கடையில் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 2-வது முறையாக நேற்றும் பொதுமக்கள் முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களுடன் வாக்குவாதம், தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூரை அடுத்த மூலக்கடை சத்திய வாணிமுத்து தெருவில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கடந்த 18-ந்தேதி புதிதாக மதுக்கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்றது. இதற்காக லாரிகள் மூலம் மது பாட்டில்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டது.

இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். எம்.கே.பி.நகர் போலீஸ் உதவி கமிஷனர் அழகேசன், கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் இங்கு மதுக்கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர். அதை ஏற்று முற்றுகையை கைவிட்டனர்.

இந்தநிலையில் நேற்று அந்த மதுக்கடையை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முயற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், 2-வது முறையாக நேற்றும் மதுக்கடை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மதுக்கடையை திறக்க வந்த டாஸ்மாக் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். நீண்டநேரம் ஆகியும் போலீசார் வராததால் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு அங்கு வந்த கொடுங்கையூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் மதுக்கடை நேற்றும் திறக்கப்படவில்லை. மீண்டும் மதுக்கடையை திறக்க முயன்றால் ஆர்ப்பாட்டம், தீக்குளிப்பில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை