நெல்லை,
நெல்லை அருகே உள்ள காங்கேயன்குளத்தை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மகன் சுடலைமணி (வயது 17). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
சுடலைமணி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து கொண்டு இருந்தார். நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டி பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுடலைமணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுடலைமணி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரசு பஸ் மோதி, பாலிடெக்னிக் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.