தாம்பரம்,
பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விநாயகர் நகரில் உள்ள கலைஞர் தெருவைச் சேர்ந்தவர், சுப்பிரமணியன் (வயது 77). இவர் அதே பகுதியில் உள்ள சைக்கிள் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சுப்பிரமணியனுக்கு 4 மகள்கள் மற்றும் 5 மகன்கள் என 9 பிள்ளைகள் உள்ளனர்.
இவரது பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில், தன் சொத்துக்களை அவர்களுக்கு, சரிசமமாக பிரித்து கொடுத்து விட்டு சுப்பிரமணியன் அவரது, வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் சலூன் கடை நடத்தி வரும் அவரது ஆறாவது மகனான முருகன் (45) என்பவர் அவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்கு செல்லும் வழியை அடைத்துள்ளார். இது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் தகராறு இருந்து வந்த நிலையில் நேற்று காலை ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், மகன் என்றும் பாராமல் முருகனை அரிவாளால் வெட்டினார்.
அதில் முருகனுக்கு இடது தோள்பட்டை உட்பட 5 இடங்களில் காயம் ஏற்பட்டது ; அதை தடுக்க வந்த முருகனின் மனைவி மாரிச்செல்விக்கும் வெட்டு விழுந்தது. இது குறித்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுப்பிரமணியனை கைது செய்து விசாரிக்கின்றனர்.