பரமத்திவேலூர்,
பரமத்தி அருகே உள்ள இருக்கூரில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற பரமத்தி போலீசார் இருக்கூர் காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த கமல் மகன் ராஜூ (வயது 29) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ராஜூ பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.