ராஜாக்கமங்கலம்,
ராஜாக்கமங்கலம் கணபதிபுரம் தெக்கூரை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் போலீசாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு 7 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது. இது சம்பந்தமாக முருகன் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர். மேலும், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் மகன் அரவிந்த் (வயது 24) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், போலீஸ்காரர் வீட்டில் திருடியதை அரவிந்த் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் சூரப்பள்ளம் மஞ்சாடியம்மன் கோவிலில் இருந்து 1 பவுன் நகையும், பழவிளை புதுக்குடியிருப்பில் பெண்ணிடம் 15 பவுன் நகையும் பறித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அரவிந்திடம் இருந்து 23 பவுன் நகையை போலீசார் மீட்டனர். இவருக்கு மேலும் பல திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.