ஸ்ரீபெரும்புதூர்,
சென்னை தியாகராய நகர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் சசிக்குமார். இவர், சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய தம்பி அருண் கார்த்தி(வயது 23). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், தாம்பரத்தில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் அண்ணன்-தம்பி இருவரும் மோட்டார் சைக்கிளில் ஆரணியில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றனர். பின்னர் நேற்று காலை இருவரும் மோட்டார்சைக்கிளில் ஆரணியில் இருந்து சென்னை நோக்கி திரும்பி வந்துகொண்டு இருந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி இவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண்கார்த்தி, சம்பவ இடத்திலேயே அண்ணன் கண் எதிரேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த சசிக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தண்டலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.