ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிபுட்டி தீவில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகை கடலோர போலீசார் கைப்பற்றி மண்டபம் சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த படகில் வந்தவர்கள் என்ஜினை மறைத்து வைத்து விட்டு, மற்றொரு படகு மூலமாக தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
தீவு பகுதியில் படகை நிறுத்திவிட்டு மீனவர்கள் வேடத்தில் மீன் பிடிப்பதுபோல் கடற்கரை பகுதி வழியாகவே தப்பி சென்றிருக்கலாம் என கடலோர போலீசாரும்,கியூபிரிவு போலீசாரும் சந்தேகிக்கின்றனர்.
மண்டபம் அருகே தீவில் இலங்கை பிளாஸ்டிக் படகை நிறுத்தி தப்பி ஓடியவர்கள் குறித்தும் படகில் வந்தவர்கள் குறித்தும் கடலோர போலீசார் மற்றும் கியூபிரிவு போலீசாரும் தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மர்மம் நீடிக்கிறது
மனோலிபுட்டி தீவில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை படகு குறித்து தீவு பகுதிகளில் மீன் பிடிக்க செல்லும் மற்றும் கடல் பாசிகளை சேகரிக்க செல்லும் பாம்பன் சின்னப்பாலம், மண்டபம், வேதாளை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
படகின் புகைப்படம், விவரங்களை கடலோர காவல்படை மற்றும் மீன்துறை மூலமும் இலங்கையில் உள்ள மீன்துறை அலுவலகத்துக்கு அனுப்பி இந்த பிளாஸ்டிக் படகு யாருக்கு சொந்தமானது? என்ற விவரங்களும் கேட்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இதுவரையிலும் இந்த படகில் வந்தவர்கள் பற்றி எந்தவொரு விவரங்களும் தெரியவில்லை என்பதால் மர்மம் நீடிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.