மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி 5-ம் வகுப்பு மாணவன் சாவு

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கியதில் 5-ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருமழிசை பாரதி நகரை சேர்ந்தவர் பால் மரியதாஸ். இவரது மகன் வில்லியம் ஜார்ஜ் பெர்ணான்டஸ் (வயது 10). அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த 20-ந்தேதியன்று வில்லியம் ஜார்ஜ் பெர்ணான்டஸ் தனது வீட்டு மாடியில் இரும்பு பைப்பை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது இரும்பு குழாய் அருகே இருந்த மின்சார கம்பியின் மீது பட்டதில் சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்து அவன் தூக்கி வீசப்பட்டு மயங்கினான். இதைகண்ட அவனது பெற்றோர்கள் உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வில்லியம் ஜார்ஜ் பெர்ணான்டஸ் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதுபற்றி பால்மரியதாஸ் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT