திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த பையனூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மனைவி சீதா. 3 மகன்கள் உள்ளனர். ஜலதோஷம், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த செல்வம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை செல்வம் ஆஸ்பத்திரி 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக அவரது உறவினர்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவதற்குள் காயார் போலீசார் உதவியுடன் செல்வத்தின் உடல் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து அவரது உறவினர்கள் செல்வத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு இறந்து போனவரின் குடும்பத்திற்கு போதிய இழப்பீடு வழங்கும் படி கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து அவரது மகன் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.