செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா வடதின்னலூர் கிராமத்தில் கல்யாணசுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில மாதங்களுக்கு முன்பு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின் சாமிக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கோவிலில் ரூ.2 லட்சம் மதிப்பில் பார்வதி சமேத கல்யாணசுந்தரேஸ்வரருக்கு ஐம்பொன் உற்சவர் சிலை கிராம மக்கள் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. பிரதோஷத்தின்போது இந்த சிலைக்கு பூஜை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது.
சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்ததும் நிர்வாகி மணி என்பவர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அன்று நள்ளிரவு வந்த மர்மநபர்கள் மதில் சுவர் மீது ஏறி கோவில் பிரகாரத்துக்குள் குதித்துள்ளனர். பின்னர் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அந்த நபர்கள், பீரோவையும் உடைத்துள்ளனர்.
அதன்பின் அவர்கள் ஐம்பொன் உற்சவர் சிலையை திருடிக்கொண்டு தப்பி விட்டனர். நேற்று காலை கோவிலுக்கு வந்த நிர்வாகி மணி கோவிலின் உள்பிரகார கதவின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஐம்பொன் சாமி சிலை திருடப்பட்டு இருந்தது.
அது குறித்து அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் மணி புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகிறார்.