நெல்லை,
தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க நிறுவனர் தலைவர் கண்ணபிரான் பாண்டியன் தலைமையில், அந்த இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டியிருந்தனர். மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பினர். பின்னர், அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
அம்பை தாலுகா மன்னார்கோவில் பகுதியை சேர்ந்த முப்புடாதி மகன் கிங்ஸ்டன், தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் மாநில இளைஞர் அணி செயலாளராக செயல்பட்டு வருகிறார். இவரை அம்பை போலீசார் கடந்த 21-ந்தேதி அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், எந்தவித குற்றச்செயலிலும் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது. இருந்தபோதிலும் அவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எங்களது இயக்க நிர்வாகிகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, போலீசார் மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கிங்ஸ்டன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். இதுபோன்று பொய் வழக்குகள் பதிவு செய்வதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.