சென்னை,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அனைத்து துறை ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகையில் நடந்தது. கூட்டத்துக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தலைமை தாங்கினார். அந்தந்த துறைகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கமிஷனர் கோ.பிரகாஷ், நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை காலத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகளை கண்காணிக்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் அதுல்ய மிஸ்ரா தலைமையில் மண்டலத்துக்கு ஒரு அதிகாரி விதம் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம்.
இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மண்டல அதிகாரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவர். பக்கிங்காம் கால்வாயில் இருந்து முட்டுக்காடு வரை தூர்வாரி பராமரிக்கவும், அம்பத்தூர், கொரட்டூர், ரெட்டேரியில் உள்ள கல்வாய், மழைநீர் வடிகால் மற்றும் நீர்நிலைகளை தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் முகப்புகளில் படிந்துள்ள மணலை தூர்வாரி, கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 2 ஆயிரம் கி.மீ. மழைநீர் வடிகால்வாயை தூர்வாரும் பணிகள் 15 நாட்களுக்குள் முடிக்கப்படும்.