மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே நடுவழியில் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திய வடமாநில வாலிபர்கள்

கன்னியாகுமரி நோக்கி சென்ற ‘விவேக் எக்ஸ்பிரஸ்’ ரெயிலில் பயணம் செய்த வடமாநில இளைஞர்கள் அடிதடியில் ஈடுபட்டு நடுவழியில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தினர்.

தினத்தந்தி

ஆம்பூர்,

ரெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் பரவியதால் பயணிகள் கீழே குதித்து தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலம் திப்ருகர் நகரிலிருந்து கன்னியாகுமரிக்கு விவேக் எக்ஸ்பிரஸ் அதிவேக ரெயில் வாராந்திர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில் நேற்று வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் நின்றபின் சேலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. மாலை 5.10 மணியளவில் வாணியம்பாடி ரெயில் நிலையத்தை கடந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றபோது ரெயிலின் 4-வது பெட்டியில் இருந்த சிலர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். அப்போது ரெயிலில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், சில நிமிடங்களில் வெடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பதற்றத்துடன் ரெயிலில் இருந்து ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கீழே இறங்கினர்.

அதே நேரத்தில் அந்த ரெயிலின் 8-வது பெட்டியில் இருந்து திடீரென புகை வர ஆரம்பித்தது. இது மேலும் ரெயில் பயணிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் ரெயிலின் அனைத்து பெட்டிகளிலும் இருந்த பயணிகள் இறங்கி தண்டவாளத்தில் ஆங்காங்கே நின்றும், சிலர் தலைதெறிக்க ஓடிக்கொண்டும் இருந்தனர்.

அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி செல்லும் டபுள் டெக்கர் ரெயில் எதிர் திசையில் அந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தது. பயணிகள் தண்டவாளத்தின் நடுவில் நிற்பதை பார்த்த அந்த ரெயிலின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு சற்று தொலைவில் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதற்கிடையே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயில் நிறுத்தப்பட்ட தகவல் அறிந்ததும் வாணியம்பாடி ரெயில் நிலைய அதிகாரிகளும், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கூட்ட நெரிசலில் 4-வது பெட்டியில் இருந்த வடமாநில இளைஞர்கள் 4 பேர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தியதாக தெரிந்தது. அதைத்தொடர்ந்து அந்த 4 பேரையும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த களேபரத்தால் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கேயே அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பின்னால் வந்த சென்னை - பெங்களூரு, கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவையும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரெயில் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் ரெயில்வே அதிகாரிகள் சோதனைக்கு பின்னர் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. அதனை தொடர்ந்து மற்ற ரெயில்களும் புறப்பட்டு சென்றன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு