மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி மேடைப்பாடகர் பலி

கிருமாம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி மேடைப்பாடகர் பரிதாபமாகச் செத்தார். இசைக் கலைஞர் படுகாயம் அடைந்தார்.

தினத்தந்தி

பாகூர்,

கடலூர் பாதிரிக்குப்பம் ராமர்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்ற சிவக்கொழுந்து (வயது 50), மாற்றுத்திறனாளி. கோவில் திருவிழா உள்ளிட்ட விசேஷங்களில் நடத்தப்படும் இசைக் கச்சேரி மேடைகளில் சினிமா பாடல்களை பாடி வந்தார். நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி வேல்ராம்பட்டில் இவருடன் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சக கலைஞர் சுகுமாறன் என்பவரின் திருமணம் நடந்தது.

இதில் பங்கேற்பதற்காக சிவக்கொழுந்துவும், புவனகிரியை அடுத்த திருத்திக்கொள்ளை பகுதியைச் சேர்ந்த தபேலா இசைக்கலைஞர் ஜெயசீலனும் (38), ஒரு மோட்டார் சைக்கிளில், வேல்ராம்பட்டுக்கு வந்தனர்.

திருமணம் முடிந்து இரவில் அவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

கிருமாம்பாக்கம் அருகே கந்தன்பேட் பகுதியில் அவர்கள் சென்றபோது, அந்த வழியாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் பாடகர் சிவக்கொழுந்து பரிதாபமாகச் செத்தார். இசைக்கலைஞர் ஜெயசீலனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை