பொள்ளாச்சி,
கேரளா மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் மார்க்கோஸ். இவரது மகன் பேசில் மார்க்கோஸ் (வயது 20). இவர் கேரளாவில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம். சி.ஏ. படித்து வருகிறார். இவரது சகோதரி நிம்மி மார்க்கோஸ் பொள்ளாச்சியை அடுத்த சின்னாம்பாளையத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் பேசில் மார்க்கோஸ், தனது சகோதரியை பார்க்க பொள்ளாச்சிக்கு வந்தார். இதற்கிடையில் வீட்டில் இருந்த சகோதரியிடம் சைக்கிளில் பொள்ளாச்சி வரை சென்று வருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து உடுமலை ரோட்டில் பொள்ளாச்சி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
பழனியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ் சின்னாம்பாளையம் பகுதியில் வந்த போது சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பேசில் மார்க்கோஸ் பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று, பேசில் மார்க்கோஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை பறிமுதல் செய்து மகாலிங்கபுரத்தில் உள்ள துணை சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் உடுமலையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சியில் நடந்த விபத்தில் கேரள கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.