மாவட்ட செய்திகள்

மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் திருடிய பார் அழகி கைது ரூ.8 லட்சம் நகை, செல்போன்கள் பறிமுதல்

மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் திருடி வந்த பார் அழகியை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை,

மும்பை துறைமுக வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்களில் பெண் பயணிகளை குறிவைத்து நகைகள், மணிபர்சு போன்றவை திருடப்பட்டு வருவதாக வடலா ரெயில்வே போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், புர்கா அணிந்திருந்த பெண் ஒருவர் இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புர்கா அணிந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவண்டியை சேர்ந்த யாஸ்மின் சேக்(வயது37) என தெரியவந்தது.

அதுமட்டும் இன்றி இவர் பார் அழகியாக இருந்து வந்ததும், மும்பையில் நடன பார் மூடப்பட்ட நிலையில் வருமானம் பாதிக்கப்பட்டதால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் திருடிய பணம் மூலம் கோவண்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக வீடு ஒன்றை வாங்குவதற்காக முன்பதிவு செய்து உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் யாஸ்மின் சேக்கை கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகள், செல்போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். இவருக்கு 53 திருட்டு சம்பவங்களில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

SCROLL FOR NEXT