மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றுமுன்தினம் துபாயில் இருந்து விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் தீவிர சோதனை நடத்தினா. ஆனால் தங்கம் எதுவும் சிக்கவில்லை.
இதையடுத்து அதிகாரிகள் விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்களின் உடைமைகளிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, சனா பதான் (வயது30) என்ற விமான பணிப்பெண்ணின் பையில் இருந்த உள்ளாடைகளில், ரூ.1 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கத்துகள்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், விமான பணிப்பெண்ணை அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து சனா பதானிடம் நடத்திய விசாரணையில், சாகில் என்ற நபர் கூறியதன் பேரில், ரூ.60 ஆயிரம் கமிஷனுக்காக தங்கத்தை கடத்தி வந்ததாக தெரிவித்தார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.