ஏற்காடு,
சுற்றுலா வந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்களை இயக்க போலீசார் தடை விதித்துள்ளனர். இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்கவும் போலீசார் உத்தரவிட்டனர்.
ஈரோட்டை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் தனது காதலனுடன் சேலம் மாவட்டம், ஏற்காட்டுக்கு கடந்த 27-ந் தேதி சுற்றுலா வந்தார். அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் அந்த பெண் கோபித்து கொண்டு அறையை விட்டு வெளியேறி ஏற்காடு அண்ணா பூங்கா அருகே நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களான ஏற்காடு ஜெரினாகாடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது 31), மஞ்சக்குட்டை பகுதியை சேர்ந்த குமார்(32) ஆகியோர் அந்த பெண்ணை வழிமறித்து உதவி செய்வது போல நடித்து பணம் பறித்தனர். அந்த பெண்ணை ஒரு தனியார் விடுதிக்கு அழைத்து சென்று விஜயகுமார் கற்பழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆட்டோ டிரைவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏற்காட்டில் நேற்று முதல் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்கக்கூடாது என தடை விதித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை மூடவும் போலீசார் உத்தரவிட்டனர்.