வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே அழகாபுரி குடகனாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 27 அடி. இந்த அணைக்கு வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 23.62 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 62 கன அடி நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக அணையில் உள்ள வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் திறக்கவேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில் அணையில் இருந்து 2 வாய்க்கால் வழியாக பாசனத்திற்கு ஒரு வாரம் விட்டு, ஒரு வாரத்திற்கு 90 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து குடகனாறு அணையில் வலது பிரதான வாய்க்கால் மூலம் வினாடிக்கு 54 கன அடி மற்றும் இடது பிரதான வாய்க்கால் மூலம் வினாடிக்கு 14 கன அடி தண்ணீரை எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ. நேற்று திறந்து வைத்தார். இதன் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிகழ்ச்சியில் குடகனாறு அணை செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர் முருகன், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், நகர செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் மாவட்ட துணைச்செயலாளர் ஜீவா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.