மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மனு

குடிநீர் வசதி கேட்டு மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் நாடக நடிகர்கள் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர்.

அதில், எங்கள் பகுதியில் சுமார் 80 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மேலும் மற்ற தேவைகளுக்கு தண்ணீர் வினியோகிப்பதற்காக, எங்கள் ஊர் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அதன் அருகில் உள்ள வீடுகளுக்கு மட்டும் குழாய் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். அனைத்து வீடுகளுக்கும் முறையாக குழாய் பதித்து தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

தோட்டனூத்து அருகே உள்ள ரெண்டலப்பாறையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களை முறையாக தூர்வாருவதில்லை. இதனால் அதில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி குடியிருப்பு பகுதியில் வீடுகளின் முன்பு தேங்கி நிற்கிறது.

பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தியாகி குழந்தைகளுக்கு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் நிலை உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு மருத்துவர் சமூகநல சங்கத்தினர் கொடுத்த மனுவில், முடிதிருத்துபவர்கள் மற்றும் சலவை தொழில் செய்பவர்களிடம் அரசு எந்தவிதமான வரியும் வசூலிப்பதில்லை. ஆனால் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சலூன் கடை வைத்திருப்பவர்களிடம் மட்டும் மாநகராட்சி அதிகாரிகள் வரி கட்ட சொல்கின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளனர்.

மனு அளிப்பதற்காக வந்திருந்த விவசாயி ஒருவர் கையில் பை வைத்திருந்ததால் அதனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் ஒன்று இருந்தது. விசாரணையில், வயலில் சாகுபடி செய்துள்ள பயிருக்கு தெளிப்பதற்காக அதனை வாங்கி வைத்துள்ளதாக விவசாயி தெரிவித்தார். இதனால் அந்த பையை போலீசார் வாங்கி வைத்துக்கொண்டு அவரை மனு அளிக்க அனுமதித்தனர். மனு அளித்துவிட்டு வந்ததும் அந்த பை விவசாயியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல மாவட்டம் முழுவதும் இருந்த வந்திருந்த பொதுமக்களிடம் இருந்து 289 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்