பேரணாம்பட்டு
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே வாழைத்தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை வாழைமரங்ளை சாய்த்து தோட்டத்தையே சூறையாடி உள்ளது.
விளை நிலங்கள்
பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர், கொத்தூர், மாச்சம்பட்டு ரெட்டி கிணறு பகுதிகளில் உள்ள விவசாயளிகள் தங்கள் நிலங்களில் மா, வாழை, நெல் பயிரிட்டுள்ளனர். அவை நன்கு விளைந்து கைமேல் பலன் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு சவால் விடும் வகையில் யானை கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து வந்த ஒற்றையானை கடந்த 10 நாட்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு பயிர்களை நாசப்படுத்தி வருகிறது.
சூறையாடியது
தற்போது இந்த ஒற்றை யானை அருகில் உள்ள சேராங்கல் கிராம பகுதியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டத்திற்குள் புகுந்து அங்கு குலைதள்ளிய வாழைகளை தின்று மரங்களை சாய்த்து தோட்டத்தையே சூறையாடியது.
பின்னர் தாமோதரன், ரவி, மில்கார் வேணு ஆகியோரது வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை நாசம் செய்து மாமரங்களை சாய்த்ததோடு வேலியாக அமைக்கப்பட்டிருந்த பட்டியல் கற்ளையும் வரிசையாக கீழே சாய்த்து விடிய, விடிய அட்டகாசத்தில் ஈடுபட்டது.
அந்த ஒற்றை யானையை பேரணாம்பட்டு, ஆம்பூர் வனத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் தூங்காமல் கண் விழித்து பட்டாசு வெடித்தும், தீப்பந்தங்களை கொளுத்தியும் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் விரட்டினர்.
எனினும் அந்த ஒற்றை யானை எந்த நேரமும் வயல்களுக்குள் நுழையலாம் என்பதால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.