ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ராஜா தினகர் ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை மற்றும் தேசிய பசுமைப்படை ஆகியவற்றின் சார்பில் பிளாஸ்டிக் மாசுவை முறியடிப்போம் என்ற கருத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராஜா தினகர் உயர்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணி, சிகில் ராஜவீதி, செய்யது அம்மாள் மருத்துவமனை, வண்டிக்கார தெரு, அரண்மனை சாலை வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. இதில் மாணவ-மாணவிகள் 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பிளாஸ்டிக் தவிர்ப்போம், மண்வளம் காப்போம், மரம் வளர்ப்போம் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.