நாமக்கல்:
உறுதிமொழி ஏற்பு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்து தந்த டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளை சமத்துவ நாளாக கொண்டாடுவதோடு, சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்குமாறு தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் தலைமை தாங்கினார்.
முன்னதாக அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
சமத்துவ சமுதாயம்
சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவதோடு, சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டோம் என்றும், சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்போம் எனவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.