பெரம்பலூர்,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்கம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் பட்டினி போராட்டம் நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மாணிக்கம், செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் பட்டினி போராட்டம் நடந்தது.
பெரும்பாலான தனியார் பள்ளிகளின் வளாகத்தில், அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டத்தில் காலை முதல் மாலை வரை ஈடுபட்டனர். பெரம்பலூரில் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் பட்டினி போராட்டம் நடந்தது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள் மூடப்பட்டதாலும், ஊரடங்கினாலும் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மாதம், மாதம் ரூ.10 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு 2018-19-ம் ஆண்டிற்கு கிடைக்க வேண்டிய ஆர்.டி.இ. நிலுவைத் தொகை 40 சதவீதத்தையும், 2019-20-ம் ஆண்டிற்கு கிடைக்க வேண்டிய ஆர்.டி.இ. கல்வித் தொகை 100 சதவீதத்தையும் உடனடியாக அரசு வழங்க வேண்டும். நர்சரி-பிரைமரி பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.