காரியாபட்டி,
நரிக்குடி ஒன்றியம், வி.கரிசல்குளம், திருவளர்நல்லூர், பூம்பிடாகை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 10 கிராமங்களில் உள்ள ரேஷன்கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படாத நிலை இருந்து வந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அரசின் நிவாரண உதவி கிடைக்காமல் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இது குறித்து ஒன்றிய கவுன்சிலர் கலாவதி சந்திரன், அ.தி.மு.க. ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் தியாகராஜன் மற்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர். அவர் இதனை உடனே கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
அதன் அடிப்படையில் விடுபட்டுள்ள அந்த 10 கிராமங்களைச் சேர்ந்த ரேஷன்கார்டுதாரர்களுக்கு ரூ.1000 நிவாரண நிதி வழங்க கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அக்கிராமங்களில் திருச்சுழி தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் வருவாய்த்துறையினர் அரசின் நிவாரண உதவியை வழங்கி வருகின்றனர்.