மாவட்ட செய்திகள்

புதுச்சேரி விடுதலை நாள் விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றினார் கடற்கரையில் கோலாகலம்

புதுச்சேரி விடுதலை நாளையொட்டி கடற்கரை சாலையில் நடந்த கோலாகல விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றினார்.

புதுச்சேரி,

புதுச்சேரி விடுதலை நாள் விழா கடற்கரை காந்தி திடலில் நேற்று காலை கொண்டாடப்பட்டது. விழா நடந்த இடத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி காலை 8.59 மணிக்கு வந்தார். அவரை தலைமை செயலாளர் அஸ்வனி குமார், போலீஸ் டி.ஜி.பி. சுந்தரி நந்தா ஆகியோர் வரவேற்றனர்.

விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக்குழுவினர் தேசியகீதம் இசைத்தனர்.

அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி நடந்து சென்று போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் விழா மேடைக்கு வந்த அவர் விடுதலை நாள் விழா உரையாற்றினார். தொடர்ந்து போலி ஏ.டி.எம். கார்டு வழக்கில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர்படை, பள்ளி, மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின்னர் கொட்டும் மழையில் பல்வேறு கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

விழாவில் சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி, சாமிநாதன், சங்கர், புதுவை அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், பிரெஞ்சு தூதரக அதிகாரி கேத்ரின், ராஷ்டிரிய ஜனதா தள மாநில தலைவர் சஞ்சீவி, அரசு செயலாளர்கள், காவல்துறை அதிகாரிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், தியாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கடற்கரை காந்தி திடலில் இருந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபைக்கு வந்தார். அங்கு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT