மாவட்ட செய்திகள்

புன்னக்காயல் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா தேர் பவனி

புன்னக்காயல் ராஜகன்னி மாதா ஆலய திருவிழா தேர் பவனி நடைபெற்றது.

ஆறுமுகநேரி,

ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் புனித ராஜகன்னி மாதா ஆலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் விழா நடந்த 10 நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. 10-ம் திருவிழா அன்று திருவிழா மாலை ஆராதனை தூத்துக்குடி ஆயர் இல்ல தந்தை இருதயராஜ் அடிகளார் தலைமையில் நடந்தது. இதில் தூத்துக்குடி மறை மாவட்ட பல்நோக்கு சமூக சேவை சங்க தந்தை பெஞ்சமின் டி சூசா மறையுரையாற்றினார். தூத்துக்குடி இனிகோ நகர் பங்கு தந்தை ஜேசுதாஸ் பர்னான்டோ, தூத்துக்குடி புனித சார்லஸ் ஆலய பங்கு தந்தை சில்வஸ்டர் பெர்னான்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னையின் தேர் பவனி நடைபெற்றது.

கூட்டுத்திருப்பலி

11-ம் திருவிழா அன்று காலை புனித ராஜகன்னி மாதா அமர்ந்த தேரில் முதல் திருப்பலியை மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு பென்சன் பர்னாந்து நிறைவேற்றினார். தொடர்ந்து திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெற்றது. இதில் மறைமாவட்ட பொருளாளர் சகாயம் அடிகளார், மறை மாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் பென்சிலின் அடிகளார், கப்ஜின் சபை ராஜ் அடிகளார், சேர்ந்தபூமங்களம் பங்கு தந்தை செல்வன் அடிகளார், ஆயரின் செயலர் தினேஷ் அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராஜ கன்னி மாதா ஆலய தேர் பவனியும் நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை பிராங்கிளின் பெர்னாண்டோ அடிகளார், உதவி பங்கு தந்தை சிபாகர் அடிகளார், ஊர் கமிட்டி தலைவர் இட்டோ பர்னாந்து மற்றும் ஆலய நிர்வாக கமிட்டியினர், ஊர்மக்கள் செய்திருந்தனர்.

SCROLL FOR NEXT