கீரமங்கலம்,
பள்ளி மாணவர்கள் புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வாசிப்பு மாதம் கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகள் புத்தகம் வாசிக்க உற்சாகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி மாணவிகளுக்கு புத்தக வாசிப்பிற்காக ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். அந்த பாடவேளைகள் முடிந்த பிறகு கவிதை, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும், என்றார். தொடர்ந்து மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீரமங்கலம் கிளை நூலகர் (பொறுப்பு) சந்திரன் செய்திருந்தார்.
இதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர். இதற் கான ஏற்பாடுகளை கிளை நூலகர் ஆனந்தி செய்திருந்தார்.